தானே ஒடித்து கொள்ளும்
தற்குறிகள் இவை அல்ல
யாரும் ஒடித்துவிட
எதிரிகளும் இதற்கு இல்லை
ஏனோ வந்த ஊழ்
எல்லாம் இங்கு பாழ்
தானே தந்த வினை
பாருமெம் தாழ் வினை
***
நீ கொடுத்த நிழல்கள்
நிழலாகி போனதுவே
இனியாம் யார்
மடியில் படுத்துறங்க
என்னருமை பலா மரமே…
வியர்வையைப் பாச்சித்தான்
உம்மை வளர்த்தோம்
எல்லாம் வீணாகி போனதனால்
வெம்மி தவித்தோம்
***
நீ வளர்த்ததெனினும்
நீ வளர
யாம் வளர்த்த
நினைவுகளை
அறுக்காதே
நெஞ்ச வயல்
பாலையானால்
தோன்றுவதுக்
கானல் நீரல்ல
கண்ணீர்…
ஒ தென்றலே நீ
தீண்டிய போதெல்லாம்
வெட்கத்தால் குனிந்த
என் தலையை
ஏன் திருகி சென்றாய்?…
நான் காய்க்கும்
முன்னமே என்னைக்
களவாடியது
என் கனிகளுக்கா ?
ஒ.. அகலிகா
கெளசிக உருவில் வந்த
இந்திரனும் தானேபோல்
தான் நுழைந்தானோ?
நானோ அவனுடன்
ஓடிப்போயிருந்தால்
பிழைத்திரிப்பேனோ - ஆனால்
உலகம் பழித்திருக்கும் -
நாணம் இல்லையென…
நான் வீழ்ந்த பின்னரே
அறிந்தேன் – நான்
வஞ்சகனின்
வலி அறியா
பெண்மையென
வடியும் என்
கண்ணீரும்
வெண்மையென …